பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற பயங்கரவாத ஆட்சியை வீழ்த்த ஒன்றிணைந்து போராடுவோம் - தொல்.திருமாவளவன் பேச்சு

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற பயங்கரவாத ஆட்சியை வீழ்த்த ஒன்றிணைந்து போராடுவோம் என்று ம.தி.மு.க. மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசினார்.

Update: 2018-09-15 23:00 GMT

ஈரோடு,

மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது கூறியதாவது:–

தந்தை பெரியார், அண்ணா வழியில் தொடர்ந்து ம.தி.மு.க. இயங்குகிறது. பெரியாரின் பாசறையாக, அண்ணாவின் கொள்கையை வளர்ப்பவராக வைகோ காணப்படுகிறார். அவருடைய அடையாளத்தை மறுக்க முடியாது. தியாகம், உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அவருடைய வரலாறு உணர்த்தும். 18 ஆண்டுகள் அவர் எம்.பி.யாக இருந்தார். அவர் பாராளுமன்றத்தில் பேசிய வார்த்தைகள் தேசிய அளவில் ஈர்க்கப்பட்டது. அவருடைய பேச்சில் உண்மையும், உணர்வும், துணிச்சலும் இருக்கும். இளைய தலைமுறை அவருடைய பாராளுமன்ற வாதங்கள் தொடர்பான புத்தகங்களை படிக்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் கலைஞரின் பேச்சை கேட்டு நான் வளர்ந்ததுபோல் வைகோவின் பேச்சும் என்னை வளர செய்தது. தமிழ் உணர்வு, ஈழத்தமிழ் உணர்வு, சமூகநீதி என்கிற கோட்பாடுகளை எல்லாம் இவருடைய பேச்சில் இருந்து நான் கற்றுக்கொண்டேன். வைகோவின் பேச்சை கேட்க ஆர்வமாக சென்றிருக்கிறேன்.

தமிழகத்தில் சாதியவாதமும், மதவாதமும் முளைக்க தொடங்கி இருக்கிறது. இதை தடுக்க திராவிட இயக்கம் தேவைப்படுகிறது. சமூகத்தில் முடைநாற்றம் வீசிய மூட பழக்க வழக்கங்களில் இருந்து மக்களை மீட்க போராடியவர் பெரியார். அவர் ஒரு பூகம்பமாக எழுந்தார். பெரியாரின் கோட்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தவர் அறிஞர் அண்ணா. பெரியாரின் கருத்துகளை செயல்வடிவமாக்கி புதிய பரிமாணத்தில் ஆற்றலை பன்மடங்காக பெருக்கியவர் அண்ணா.

இன்றைய காலத்தில் சமூக நீதியும், மதச்சார்பின்மையும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. மொழி, இனம் என்ற பெயரில் பெரியாரை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. சமூக நீதியை காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழலில் பெரியாரும், அண்ணாவும் தேவை. அவர்களுடைய இடத்தில் இருப்பவர் வைகோ. அவர் உணர்ச்சி பெருக்கோடு இருப்பவர். உண்மை இருக்கும் இடத்தில் உணர்ச்சி இருக்கும். நேர்மை மிக்க தலைவராக தூய்மையான வாய்மையுடன் கிடைத்த அரும்பெரும் கொடை வைகோ. ஆட்சி அதிகாரங்கள் அவரிடம் இல்லாமல் இருந்தாலும் மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.

இதற்காக மக்கள் நல கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். ஓட்டுக்காகவும், சீட்டுக்காவும் உருவாக்கப்பட்டது கூட்டணி அல்ல. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்ற பயங்கரவாத ஆட்சியை வீழ்த்த ஒன்றிணைந்து போராடுவோம்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

மேலும் செய்திகள்