திருப்பூரில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்

திருப்பூரில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது.

Update: 2018-09-15 23:00 GMT
அனுப்பர்பாளையம்,

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி கடந்த 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. இதில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் தவிர மற்ற அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன.

அதன்படி, தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் சார்பில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 20-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம் திருப்பூர் ஸ்ரீநகரில் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அங்கு 11 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்கு விசுவ இந்து பரிஷத் மாநகர தலைவர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் முருக பாண்டி முன்னிலை வகித்தார். மும்மதத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர். பின்னர், விசர்ஜன ஊர்வலம் தொடங்கியது.

விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் சுதாகர் மற்றும் ஸ்டாலின், ஜமால், அரசியல் கட்சிகளை சேர்ந்த மனோகரன் (ஐ.ஜே.கே.), காந்தி (தி.மு.க.), பிரபு (அ.தி.மு.க.), லட்சுமணன் (பசும்பொன் பக்தர் பேரவை), சுந்தரமூர்த்தி (ஸ்ரீகருப்பன்சாமி அய்யப்பா சேவா சங்க அறக்கட்டளை) ஆகியோர் விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தின் போது, பக்தர்கள் சிலர் புலி, சிறுத்தை போன்ற வேடமணிந்து நடனமாடினார்கள். மேலும் குழந்தைகள் கைகளில் சிறிய விநாயகர் சிலைகளை ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்