பாலமலை காப்புக்காட்டில் எறும்பு தின்னி வேட்டையாடிய 2 பேர் கைது

பாலமலை காப்புக்காட்டில் எறும்பு தின்னி வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2018-09-18 22:30 GMT
மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் வனச்சரக அலுவலர் பிரகாஷ் தலைமையில், வனக்காப்பாளர்கள் சரவணன், பிரான்சிஸ், சுந்தர்ராஜன் ஆகியோர் பாலமலை ஊராட்சி அருகே உள்ள கண்ணாமூச்சி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர்களிடம் விசாரித்த போது இருவரும் பாலமலையை சேர்ந்த சவுந்திரராஜன் (வயது20), மாதப்பன் (30) என்று தெரிந்தது. மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவர்கள் வைத்து இருந்த ஒரு சாக்கு பையை சோதனை செய்தனர்.

அதில் எறும்பு தின்னி இருப்பது தெரிந்தது. இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது இருவரும் பாலமலை காப்புக்காடு பகுதியில் எறும்பு தின்னியை வேட்டையாடி எடுத்து வந்ததாக கூறினர். இதைத்தொடர்ந்து இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்