ஊழலுக்கு வித்திட்டதே தி.மு.க. தான்: தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்டதே தி.மு.க. தான் என்றும், மக்களை ஏமாற்றுவதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2018-09-18 22:52 GMT
நாகர்கோவில்,

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மீதோ அல்லது மற்ற அமைச்சர்கள் மீதோ ஊழல் புகாரே இல்லாத நிலையில் ஊழல் செய்ததாக கூறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஊழலின் தந்தையாக விளங்குவது தி.மு.க. தான். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 2 முறை ஆட்சி கலைக்கப்பட்டது. அதாவது ஊழல் செய்ததற்காக ஒரு முறையும், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்ததாக மற்றொரு முறையும் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அப்படி இருக்க தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.

குமரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் வங்கி மூலமாக 16 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று அவருக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்டது தி.மு.க. தான். ஆனால் அதை தற்போது மறந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றுவதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி நேர்மையான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், மாணவரணி செயலாளர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்