சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-09-18 21:45 GMT
வேலூர், 

வாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்த பக்தவச்சலம் மகன் மணிகண்டன் (வயது 23), தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி மணிகண்டன் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றுள்ளார். தொடர்ந்து அவர், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

சிறுமியின் பெற்றோர் தனது மகள் கடத்தப்பட்டதாக வாலாஜா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அதேமாதம் 13-ந் தேதி வாலாஜா அரசுப்பள்ளியின் பின்பகுதியில் சிறுமியுடன் நின்று கொண்டிருந்த மணிகண்டனை, போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி செல்வம் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் மணிகண்டனுக்கு விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நிவாரணம் வழங்கும்படி வேலூர் மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து பலத்த காவலுடன் மணிகண்டன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்