மதுரையில் ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்த பெண், போலீஸ் வலைவீச்சு

மதுரையில் ஆண்களை தனது அழகில் மயக்கி திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-19 22:45 GMT

மதுரை,

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மகன் பிரதீப். இவர் புவனேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மாடக்குளத்தில் வீடு பிடித்து வாழ்ந்து வந்தனர்.

திடீரென்று வீட்டில் இருந்த புவனேஸ்வரி 2½ பவுன் நகையுடன் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பிரதீப்பின் தாயார் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், புவனேஸ்வரிக்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடந்திருப்பது தெரிய வந்தது. அவர் ஆண்களை தனது அழகில் மயக்கி அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்து நகை, பணத்தை மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதில் கடைசியாக பிரதீப் அவரிடம் சிக்கி கொண்டது தெரியவந்தது.

மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் புவனேஸ்வரி, அவருக்கு உடந்தையாக இருந்த ஆரோக்கியம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்