துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பள்ளி மாணவன் கொலை?

கச்சிராயப்பாளையம் அருகே துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கிடந்த பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவன் கொலை செய்யப்பட்டானா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-09-19 22:00 GMT
கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கவியரசு. இவருடைய மகன் ரவீந்திரன்(வயது 13). இவன் அதே பகுதியில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலையில் ரவீந்திரன், இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றான். பின்னர் நீண்ட நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனை தேடி வந்தனர்.

அப்போது வீட்டுக்கு அருகே உள்ள புளிய மரத்தடியில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மாணவன் ரவீந்திரன் மயங்கிய நிலையில் கிடந்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவீந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவனது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் இதுகுறித்து ரவீந்திரனின் தாய் பாப்பாத்தி கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்