ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு - மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபருக்கு வலைவீச்சு

பரமத்தி வேலூர் சக்தி நகரில் நடந்து சென்ற, ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-09-19 22:30 GMT
பரமத்தி வேலூர்,

மர்ம நபர் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

பரமத்திவேலூர் சக்தி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மனைவி மல்லிகா (வயது 71), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் நேற்று இரவு சக்தி நகர் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி நடந்து வந்தார்.

அப்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து சென்றுள்ளார். உடனே மல்லிகா திருடன் என்று சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் அங்கிருந்து மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ அருகே உள்ள ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்