மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு: பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-19 23:15 GMT

பூந்தமல்லி,

பூந்தமல்லி நகராட்சி 14–வது வார்டுக்குட்பட்ட பாபாபீ தர்கா, கோரிமேடு போன்ற பகுதிகளில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலைகளிலேயே கழிவு நீரோடு கலந்து நிற்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் 30 க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தாங்கள் கோரிக்கையாக எடுத்து வந்த மனுவை நகராட்சி கமி‌ஷனரிடம் கொடுத்தனர்.

இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:–

இந்த பகுதியில் முறையாக மழை நீர் கால்வாய் இல்லை.

இதனால் மழைக்காலங்களில் மழை நீரோடு கழிவுநீர் கலந்து வெளியேற வழி இல்லாமல் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ– மாணவிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இங்குள்ள கழிவுநீரை அகற்றி மழை நீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்