படப்பை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் சாவு

படப்பை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2018-09-20 21:30 GMT
படப்பை,

காஞ்சீபுரத்தை அடுத்த கூத்திரம்பாக்கம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 23). டிரைவர். காஞ்சீபுரம் தாயார்குளம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த சுதாகர் (22). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று காலை காஞ்சீபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வாலாஜாபாத்-வண்டலூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது படப்பையை அடுத்த வைப்பூர் எறையூர் செல்லும் கூட்டுச்சாலை அருகே மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்ற தண்ணீர் லாரி திடீரென வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் திரும்பியது. இதில் எதிர்பாராத விதமாக லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பெற்ற 2 சுதாகரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் போலீசார் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்