அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி கைது
அமைச்சர் சி.வி.சண்முகத்தை பற்றி அவதூறாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை குப்புசாமி தெருவை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 35). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞர் பாசறை இணை செயலாளராக உள்ளார்.
இவர், நேற்று முன்தினம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் சமூக வலைத்தளத்தில் (முகநூலில்) அவதூறாக பேசியுள்ளார். அந்த அவதூறு பேச்சு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் நேற்று காலை அ.தி.மு.க.வினர் புகார் செய்தனர். புகாரின்பேரில் அலாவுதீன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த ஜெகன் ஆகியோர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து அலாவுதீனை கைது செய்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஜெகனை தேடி வருகிறார்கள்.