தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு: அரிச்சல்முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால் அரிச்சல்முனை கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

Update: 2018-09-21 22:45 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியில் கடந்த 3 நாட்களாக கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. அங்கு தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதுடன், ராட்சத அலைகள் ஆக்ரோ‌ஷமாக எழும்பி வந்த வண்ணம் உள்ளன.

கடல்நீர் மட்டமும் உயர்ந்து, தண்ணீர் கரையை நோக்கி நெருங்கி வந்தது. மணல் பரப்பாக காணப்பட்ட அரிச்சல்முனை கடற்கரை முழுவதுமாக கடல்நீர் சூழ்ந்து காணப்பட்டது.

சாலையின் பாதுகாப்பிற்காக கடற்கரையில் கட்டப்பட்டு இருந்த தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. தடுப்புச்சுவரில் கற்கள் பெயர்ந்து விழுகின்றன.

அரிச்சல்முனை கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல கற்களால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடல் அரிப்பு ஏற்பட்டு அந்த படிக்கட்டுகளும் சேதம் அடைந்து வருகின்றன.

கடல் கொந்தளிப்பு காரணமாக நேற்று அரிச்சல்முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் கம்பிப்பாடு கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அங்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க கடலோர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதே போல் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் மீன்பிடி இறங்குதளத்தை தாண்டி கடல் அலைகள் பல அடி உயரம் வரை எழும்பி வந்தன.

மேலும் செய்திகள்