தமிழகத்தில் நான்கு வழிச்சாலையில் 500 இடங்களில் நவீன ஆவின் பார்லர்கள்

தமிழகத்தில் நான்கு வழி சாலையில் 500 இடங்களில் நவீன ஆவின் பார்லர்கள் அமைக்கப்படும் என்று தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Update: 2018-09-23 22:00 GMT
திருச்செந்தூர், 


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்தார். கோவிலுக்கு சென்று அவர் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஆவின் நிறுவனத்தை பொறுத்தவரை தமிழகத்தில் மட்டுமில்லாது உலக அளவில் ஆவின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலோடு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசில் ஆவின் நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. ஆவின் விற்பனையும், பால் கொள்முதலும் அதிகரித்துள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 500 இடங்களில் நவீன ஆவின் பார்லர்கள் அமைக்கப்பட உள்ளது. இவைகள் நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் அனைத்து மக்களும் இணக்கமாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் கருணாஸ் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பேச்சுரிமை, கருத்துரிமை சுதந்திரமாக உள்ளது. இதனால் தான் கருணாஸ் போன்றவர்கள் இதே போல் பேசி வருகின்றனர். அவர் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளார். திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு பிறகு யார் யார் காணாமல் போவார்கள் என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் முன்னாள் கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்