குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என உறுதி அளித்துவிட்டு மீண்டும் பணம் பறித்த வாலிபருக்கு 158 நாட்கள் சிறை

குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என உறுதி அளித்துவிட்டு மீண்டும் பணம் பறித்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2018-09-25 21:30 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை திரு.வி.க. நகர் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற குள்ளமணி (வயது 26). இவர் மீது திரு.வி.க. நகர் போலீசில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மணிகண்டன் கடந்த மாதம் 24-ந் தேதி புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனரும், செயல்முறை நடுவருமான சாய்சரண் தேஜஸ்வியிடம் நேரில் ஆஜராகி, அடுத்த 6 மாதத்திற்கு குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 8-ந் தேதி வியாபாரி ஒருவரிடம் கத்திமுனையில் பணம் பறித்தார். இதனையடுத்து திரு.வி.க. நகர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் அதை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட மணிகண்டனை துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி சிறையில் இருந்து வரவழைத்து விசாரணை நடத்தினார்.

இதனையடுத்து 6 மாதத்தில் மணிகண்டன் ஒழுக்கமாக இருந்த 15 நாட்கள் மற்றும் சிறையில் இருந்த 7 நாட்கள் கழித்து மீதம் உள்ள 158 நாட்கள் அவரை சிறையில் அடைக்க துணை கமிஷனர் உத்தரவிட்டார். இதன்பின்பு மணிகண்டனை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்