ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரை தண்டிக்க வேண்டும்

ஈழத்தமிழர்கள் படு கொலைக்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரை தண்டிக்க வேண்டும் என நடிகர் குண்டு கல்யாணம் கூறினார்.

Update: 2018-09-26 23:00 GMT
குத்தாலம்,

ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரின்போது இலங்கை ராணுவத்துக்கு உதவிய தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை கண்டித்து மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ்குமார், தமிழரசன், ராஜேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆத்தூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில்நாதன் வரவேற்றார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சினிமா நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

குண்டு கல்யாணம் பேசியபோது கூறியதாவது:-

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் இலங்கை ராணுவத்துக்கு அப்போதைய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆதரவு அளித்தது. இதனால் தான் இலங்கை ராணுவத்தால் வெற்றி பெற முடிந்ததாக இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறி உள்ளார். பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், பாரதி, முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், மாவட்ட துணை செயலாளர் விஜயபாலன், மாவட்ட பொருளாளர் செல்லையன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆசைமணி, ரெங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர துணை செயலாளர் நாஞ்சில் கார்த்திக் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்