போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி

மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-27 21:30 GMT
விழுப்புரம், 

வானூரை அடுத்த திருவக்கரை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று வானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் தலைமையிலான போலீசார், திருவக்கரை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரியை சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். ஆனால் லாரியை அதன் டிரைவர் நிறுத்தாமல், சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் மீது மோதுவதுபோல் சென்றார்.

இதில் சுதாரித்துக்கொண்ட அவர் ஒதுங்கிக்கொண்டார். தொடர்ந்து அந்த லாரியை போலீசார் ஜீப்பில் துரத்திச்சென்றனர். உடனே லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு டிரைவர் கீழே இறங்கி தப்பிச்சென்று விட்டார். விசாரணையில் தப்பி ஓடிய டிரைவர் வானூர் தாலுகா செங்கமேடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 33) என்பது தெரியவந்தது.

இதையடுத்து சக்திவேல் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்