கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-27 22:00 GMT
சாணார்பட்டி,

திண்டுக்கல் அருகே உள்ள அதிகாரிபட்டியை சேர்ந்த வெள்ளத்துரை மகன் செல்வராஜ் (வயது 27). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நடராஜ் (32). நண்பர்களான இருவரும், ஒன்றாக வேலைக்கு சென்று வந்தனர். ஒப்பந்த அடிப்படையில் இருவரும் தேங்காய் பறிக்க செல்வது வழக்கம்.

பின்னர், இருவரும் சம்பளத்தை பிரித்து கொள்வார்கள். இந்தநிலையில், சம்பளத்தை பிரிப்பதில் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று இரவு வீட்டின் அருகே நின்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நடராஜ் தேங்காய் பறிக்க பயன்படுத்தும் அரிவாளால் செல்வராஜை சரமாரியாக வெட்டினார்.

இதில், கழுத்தில் பலத்த வெட்டு விழுந்ததால் செல்வராஜ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே நடராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பலியான செல்வராஜுக்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கவிதா கொடுத்த புகாரின்பேரில் சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்