விவசாயிக்கு 2¾ ஆண்டுகள் சிறை தண்டனை - ஆத்தூர் கோர்ட்டு தீர்ப்பு

மனைவிக்கு ஜீவனாம்சம் தராத விவசாயிக்கு 2¾ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஆத்தூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2018-09-29 22:30 GMT
ஆத்தூர்,

ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 36). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் வடக்கநந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி கர்ணன் என்பவருக்கும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கர்ணன்-சுமதி தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு சுமதி ஆத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவில், மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் ஜீவனாம்சமாக கர்ணன் அவருடைய மனைவி சுமதிக்கு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கணவர் கர்ணன், ஜீவனாம்சம் வழங்கவில்லை என சுமதி தரப்பில் ஆத்தூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட கர்ணனுக்கு 2¾ ஆண்டுகள் (33 மாதங்கள்) சிறை தண்டனை விதித்து முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கர்ணன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்