திருமுருகன்காந்தி மருத்துவமனையில் அனுமதி - உணவு குழாய் பிரச்சினைக்கு சிகிச்சை

வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த திருமுருகன்காந்திக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-09-29 23:15 GMT
அடுக்கம்பாறை,

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து ஐ.நா.சபை கூட்டத்தில் பேசினார். பின்னர் நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்ட அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு சிறையில் உள்ள டாக்டர்கள் சிகிச்சையளித்தனர். பின்னர் கடந்த 24-ந் தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு உணவு குழாயில் பிரச்சினை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்ய டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி நேற்று வேலூர் ஜெயிலில் இருந்து பலத்த காவலுடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு திருமுருகன்காந்தி அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர் ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உணவு குழாய் பிரச்சினைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். போலீசாரும் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்