ஆத்தூர் அருகே, பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பலி

ஆத்தூர் அருகே, பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-10-03 22:30 GMT
ஆத்தூர்,

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ரஞ்சித்குமார் (19). கூலித்தொழிலாளர்களான இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு வேலைக்கு வந்தனர்.

நேற்று இரவு 9 மணியளவில் இவர்கள் ஆத்தூர் முல்லைவாடி சந்தனகிரி புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் பஸ் சேலத்தில் பழுது பார்க்கும் பணியை முடித்துக்கொண்டு வேப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ்சும், தொழிலாளர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் சந்தனகிரி பகுதியில் நேருக்கு நேர் பயங்கரமான மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ரஞ்சித்குமார் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்