விபத்தில் மூளைச்சாவு அடைந்த மருத்துவக் கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; 7 நோயாளிகள் பயனடைந்தனர்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு மருத்துவக் கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் 7 நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.

Update: 2018-10-04 00:27 GMT

புதுச்சேரி,

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவை சேர்ந்தவர் பால்ராஜ். வங்கி மேலாளர். இவருடைய மகன் அஜய் சில்வஸ்டர் (வயது 22). திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் 4–ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது நண்பருடன் கடந்த 28–ந் தேதியன்று மோட்டார் சைக்கிளில் காரைக்காலுக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அஜய் சில்வஸ்டருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவருக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 30–ந் தேதி அஜய் சில்வஸ்டர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க பெற்றோர் ஒப்புதல் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்கள் ஜிப்மர் மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதயம் மற்றும் நுரையீரல் போன்றவை சென்னைக்கு, தமிழ்நாடு உறுப்பு மாற்று அதிகாரத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு மொத்தம் 7 நோயாளிகளுக்கு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்