ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிகார பூஜை செய்தனர்

குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்துக்கு இடம் மாறியதை தொடர்ந்து ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகளை செய்தனர்.

Update: 2018-10-04 22:30 GMT
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு உரிய பரிகார தலமாக போற்றப்படும் இக்கோவிலை, பக்தர்கள் குருபகவான் கோவில் என்று அழைக்கிறார்கள். திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பாடப்பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று.

காசி ஆரண்யம், திரு இரும்பூளை என்ற பெயர்களும் ஆலங்குடிக்கு உண்டு. பிரசித்திபெற்ற இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும்போது “குருப்பெயர்ச்சி” விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நேற்று இரவு 10.05 மணிக்கு இடம் மாறினார். இதையொட்டி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.

குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு குரு பரிகார யாக பூஜைகள் நடந்தன. கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் தெட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பின்னர் உற்சவர் தெட்சிணாமூர்த்தி, குருபகவான் சன்னதி எதிரே உள்ள பிரகாரத்தில் எழுந்தருளினார்.

விழாவையொட்டி கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், சனீஸ்வர பகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இரவு 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நேரத்தில், தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் சரண கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

குருப்பெயர்ச்சி விழாவையொட்டி நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆலங்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வசதியாக கோவிலின் தெற்கு கோபுர வாசல் பகுதியில் தகரத்தாலான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு முதல் ஆலங்குடியில் மழை பெய்த வண்ணம் இருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் விழாவில் கலந்து கொண்டு குருபகவாகனுக்கு அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகளை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் கிருஷ்ணன், தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். குருப்பெயர்ச்சியை தொடர்ந்து 2-வது கட்ட லட்சார்ச்சனை விழா வருகிற 8-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்