இளம் பெண்ணிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு சித்ரவதை கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

இளம் பெண்ணிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த வழக்கில் கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2018-10-05 21:30 GMT

நெல்லை,

இளம் பெண்ணிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த வழக்கில் கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இளம்பெண் சித்ரவதை

நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள அச்சம்பட்டியை அடுத்த தடியாபுரத்தை சேர்ந்தவர் பெமிலா (வயது 27). இவருக்கும், மானூரை சேர்ந்த ஐசக் நியூட்டன் (29) என்பவருக்கும் கடந்த 8–9–2014 அன்று திருமணம் நடந்தது. ஐசக் நியூட்டன் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பெமிலாவிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு ஐசக் நியூட்டன் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

சொந்த ஊருக்கு வந்தார்

இதற்கு அவருடைய தந்தை அன்பு ஆபிரகாம், தாயார் செல்லம்மாள், தம்பி கிரகாம்பெல், தங்கை பிரபா ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். இதனால் விரக்தி அடைந்த பெமிலா, சொந்த ஊரான தடியாபுரத்துக்கு கணவருடன் வந்தார். அங்கு பெமிலாவை விட்டுவிட்டு ஐசக் நியூட்டன் சென்னை சென்று விட்டார்.

வரதட்சணை கேட்டு தனது கணவர் குடும்பத்தார் சித்ரவதை செய்வதாக பெமிலா அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து பெமிலா, நெல்லை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பெமிலா கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை புறநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

5 பேர் மீது வழக்கு

அதன்பேரில் பெமிலாவிடம் ஐசக் நியூட்டன், அவருடைய தந்தை அன்பு ஆபிரகாம், தாயார் செல்லம்மாள், தம்பி கிரகாம்பெல், தங்கை பிரபா ஆகிய 5 பேர் வரதட்சணை கேட்டு மிரட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்