தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் தலை துண்டித்து பெண் கொலை கணவர் கைது

திருச்சி அருகே தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் தலை துண்டித்து பெண் கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-07 23:15 GMT
திருச்சி,

திருச்சியை அடுத்த காட்டூரை சேர்ந்தவர் தனிஷ்லாஷ். இவரது மனைவி சகாயமேரி. இவர்களின் மகன் சங்கர் சகாயராஜ் (வயது 30), மகள் ஆரோக்கிய சுபு.

சங்கர் சகாயராஜூக்கும், தஞ்சை மாவட்டம் கீழதிருப்பந்துருத்தியை சேர்ந்த ஜெசிந்தா ஜோஸ்பினுக்கும் (26) கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஜெசிந்தா ஜோஸ்பின் தன்னுடைய 2½ பவுன் நகையை கழற்றி பீரோவில் வைத்திருந்தார். அதை, சங்கர் சகாயராஜ் மனைவிக்கு தெரியாமல் அடகு வைத்தார். இது தெரியவந்ததும் ஜெசிந்தா ஜோஸ்பின் கணவரிடம் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில் ஆடி மாதம் தாய் வீட்டுக்கு சென்ற ஜெசிந்தா ஜோஸ்பின், அதன்பிறகு கணவர் வீட்டுக்கு வரவில்லை.

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் சங்கர் சகாயராஜின் பெற்றோர், ஜெசிந்தா ஜோஸ்பின் வீட்டுக்கு சென்று அவர்களிடம் சமாதானம் பேசினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதால் அவர் கணவருடன் வாழ சம்மதித்தார்.

கணவர் வீட்டுக்கு வந்த பிறகும் சங்கர் சகாயராஜ்-ஜெசிந்தா ஜோஸ்பின் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் கீழ்தளத்தில் உள்ள அறையில் தூங்க சென்றனர். தனிஷ்லாஷ், சகாயமேரி, ஆரோக்கிய சுபு ஆகியோர் முதல் மாடியில் தூங்கினர்.

நேற்று அதிகாலை சகாயமேரி மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து, கதவை தட்டி மகனை எழுப்பினார். அப்போது வெளியே வந்த சங்கர் சகாயராஜின் ஆடையில் ரத்தக்கறை இருந்தது. உடனே சகாயமேரி உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் ஜெசிந்தா ஜோஸ்பின் தலை துண்டித்து பிணமாக கிடந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சகாயமேரி கூச்சல் போட்டார். உடனே மாடியில் இருந்து கணவரும், மகளும் ஓடிவந்து ஜெசிந்தா ஜோஸ்பின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையில் ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் சங்கர் சகாயராஜ் வீட்டில் இருந்து வெளியேறி கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சரணடைந்தார். பின்னர் சங்கர் சகாயராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் சங்கர் சகாயராஜ் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

நகையை அடகு வைத்ததால் ஜெசிந்தா ஜோஸ்பின் என்மீது கோபமாக இருந்தார். பின்னர் என்னிடம் சண்டை போட்டு விட்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சமாதானப்படுத்தி எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்த பிறகும், என்னுடன் அவர் சரியாக பேசவில்லை. தாம்பத்திய உறவுக்கு அழைத்தால் வர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்து அவரது கழுத்தை நெரித்தேன். மேலும் தலையணையை முகத்தில் வைத்து அமுக்கினேன். இதில் ஜெசிந்தா ஜோஸ்பின் மயக்கம் அடைந்தார்.

அப்போதும் ஆத்திரம் தீராததால் கத்தியை எடுத்து வந்து, கழுத்தை அறுக்க முயன்றேன். தலை தனியாக வராததால் அரிவாள் மற்றும் அரிவாள்மனையை எடுத்து வந்து கழுத்தில் வெட்டினேன். பின்னர் அந்த தலையை ஜெசிந்தா ஜோஸ்பின் உடல் அருகிலேயே வைத்து விட்டு, அங்கேயே விடியும் வரை படுத்து தூங்கினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்