ஹெல்மெட் அணியாததால் அபராதம்: போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற இலங்கை அகதி சிறையில் அடைப்பு

பெரம்பலூரில் ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதித்த போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற இலங்கை அகதியை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Update: 2018-10-07 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் டவுன் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன் தலைமையில் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் காலை பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த பெரம்பலூர் இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்த தள்ளுவண்டி கடலை வியாபாரியான சதீஷ் என்ற சூர்யகுமார் (வயது 32) என்பவரை வழிமறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சதீசின் மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் முடிந்து விட்டதும், அவர் வைத்திருந்த ஓட்டுனர் உரிமம், தற்காலிக ஓட்டுனர் உரிமம் என்பது தெரியவந்தது. இலங்கை அகதிக்கு ஓட்டுனர் உரிமம் கிடைப்பது அரிது என்பதால், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன் ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக மட்டும் சதீசுக்கு அபராதம் விதிக்க முயன்றார். அபராதம் விதித்தால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று சதீஷ் போலீசாரிடம் கூறினார்.

ஆனால் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன் அபராதம் விதித்தார். இதனால் மனமுடைந்த சதீஷ் வீட்டிற்கு சென்று மண்எண்ணெய் கேனை எடுத்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு வந்து, தீக்குளிப்பதற்காக தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றார்.

இதனை கண்ட போலீசார் ஓடி சென்று, சதீசிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி, அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். போலீசார் ஹெல்மெட் அபராதம் விதித்ததால் இலங்கை அகதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சதீஷ் தன்னை தகாத வார்த்தையால் திட்டியதாகவும், மேலும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன், அவர் மீது பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்து, பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்