மகாளய அமாவாசையையொட்டி சுகவனேசுவரர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையையொட்டி சேலம் சுகவனேசுவரர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.

Update: 2018-10-08 22:15 GMT
சேலம்,

தை, ஆடி மற்றும் புரட்டாசி மாத அமாவாசை தினங்களில் இந்துக்கள் தங்கள் குடும்பங்களில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பது வழக்கம். அதிலும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுப்பதால் அதிக பலனை அடையலாம் என்பது நம்பிக்கை ஆகும்.சேலம் சுகவனேசுவரர் கோவில் நந்தவனத்தில் மகாளய அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு நேற்று ஏராளமானோர் கலந்து கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில் மஞ்சள், சந்தனம், குங்குமம், விபூதி, கதம்ப பூ, வாழைப்பழம், அகத்திக்கீரை, பூசணிக்காய், அவரைக்காய், அரிசி, எள், பிண்டம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதேபோல் நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினம் என்பதால் மேட்டூர் காவிரி ஆறு, கல் வடங்கம், பூலாம்பட்டி உள்ளிட்ட காவிரி கரையோர நீர்நிலைப்பகுதிகளில் பொதுமக்கள் பலர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தனர்.

மேலும் மறைந்த முன்னோர்களின் ஆத்மா சாந்திஅடையும் வகையில், அர்ச்சகர்கள் வேதமந்திரங்களை ஓதினார்கள். பின்னர், குடும்பத்தில் உள்ளோரின் பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்து கொண்டனர். இதுபோல, அமாவாசையையொட்டி சித்தர்கோவில், தான்தோன்றீஸ்வரர் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் மற்றும் சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

மேலும் செய்திகள்