கர்நாடகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்

கர்நாடகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

Update: 2018-10-08 22:00 GMT
பெங்களூரு,

கர்நாடக அரசின் போக்குவரத்து கழகங்கள், பஸ் கட்டணத்தில் 28 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கோரி முதல்-மந்திரி குமாரசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து முடிவு எடுக்க கடந்த வாரம் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்திருந்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 9-ந் தேதி (இன்று) ஆலோசனை கூட்டம் நடத்தி, பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் இன்று(செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது. இதில் போக்குவரத்து துறை மந்திரி டி.சி.தம்மண்ணா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

பஸ் கட்டணத்தில் 28 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

குமாரசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்துவது என்று முடிவு எடுக்கப்பட்டால், இது உடனடியாக அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்