கோரிக்கைகளை வலியுறுத்தி விஸ்வகர்மா சமுதாயத்தினர் உண்ணாவிரதம்

கரூர் மாவட்ட விஸ்வகர்மா சமுதாய மக்கள் மற்றும் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகம் சார்பாக, கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Update: 2018-10-10 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட விஸ்வகர்மா சமுதாய மக்கள் மற்றும் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகம் சார்பாக, கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழக தலைவர் மணிசங்கர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். அவைத்தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பொது செயலாளர் விசுசிவக்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு செப்டம்பர் 17-ந் தேதி அரசு விடுமுறை நாளாக மத்திய அரசு அறிவித்தது. இதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். பொற்கொல்லர் மற்றும் கைவினைஞர் நலவாரியத்தை மீண்டும் அரசு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து விஸ்வ கர்மாவுக்கு பாத்தியப்பட்ட கோவில்கள் மற்றும் மடாலயங்களை தவறான புகாரின் பேரில் தமிழக அரசு கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 70 லட்சம் விஸ்வ கர்மா சமுதாய மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் செங்குட்டுவன், துணை பொதுச்செயலாளர் குமரேசன் உள்பட அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்