பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான குமரி ராணுவ வீரர் உடல் இன்று அடக்கம் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் பலியான குமரி ராணுவ வீரர் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது. மு.க.ஸ்டாலின் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-10 23:00 GMT
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே பருத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் வேலப்பன். இவருடைய மகன் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது தீவிரவாதிகள் சுட்டதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை குமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பருத்திக்காட்டுவிளைக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

அதைதொடர்ந்து 11 மணியளவில் ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, கல்குளம் தாசில்தார் சஜீத், மாவட்ட துணை போலீஸ்சூப்பிரண்டு விஜயபாஸ்கரன், தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கேயன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இதற்கிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்காட்டு விளையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெகன் பஞ்சாப்பில் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையடைந்தேன். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்திருக்கும் அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராணுவ வீரரின் மனைவிக்கு அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெறவிருந்த நிலையில் கணவனை இழந்து அந்தக் குடும்பம் ஒட்டுமொத்தமாக சோகத்தில் மூழ்கியுள்ளது இதயத்தை கலங்க வைக்கிறது. ராணுவ வீரரை இழந்து தவிக்கும் அவரது மனைவிக்கும், தாயார் மற்றும் சகோதரிகளுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் ஏதுமின்றி தவிக்கிறேன். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ள தமிழக வீரர் ஜெகனின் குடும்பத்திற்கு உரிய நிதியுதவிகளை வழங்கி, சோகத்தின் துயரப் பிடியிலிருந்து அந்தக் குடும்பத்தை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு இரங்கல் செய்தியில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்