அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதம்

வேடசந்தூர் அருகே அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-11 22:00 GMT
வேடசந்தூர், 


வேடசந்தூர் அருகே குடப்பம் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் 50-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளது. இங்கு ஒரு வீட்டில் 2 முதல் 3 குடும்பங்கள் வரை வசிக்கின்றனர். எனவே, வீடு கட்டுவதற்கு அரசு நிலம் வழங்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து 30 பேருக்கு அந்த பகுதியில் அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிலத்துக்கு பட்டா வழங்கப்படவில்லை. இதனால் அரசு ஒதுக்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட மக்கள் முயன்றனர். அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசு ஒதுக்கிய இடத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்