மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கரூரில் நடந்த மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டன.

Update: 2018-10-11 22:30 GMT
கரூர்,

கரூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கரூர் தாந்தோன்றிமலை விளையாட்டு மைதான அரங்கில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நேற்று நடந்தது. இதில் 1 முதல் 5-ம் வகுப்பு மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் தனிதனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. கரூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பலர் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். கேரம் பலகையின் அருகே உடற்கல்வி ஆசிரியர்கள் அமர்ந்து, போட்டிகளை விதிமுறைப்படி நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. அப்போது மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.2,000-ம், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.1,000-ம், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.500-ம் பரிசுத்தொகையாக வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்கள் விரைவில் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்பட இருக்கின்றனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி (பொறுப்பு) புண்ணியமூர்த்தி செய்திருந்தார்.

மேலும் செய்திகள்