சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து; என்ஜினீயரிங் மாணவர் பலி ; சகோதரர் உள்பட 2 பேர் காயம்

உசிலம்பட்டி அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் அவரது சகோதரர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-10-11 21:45 GMT
உசிலம்பட்டி, 


உசிலம்பட்டி அருகே ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மொக்கையன். இவரது மகன் நித்தீஸ்(வயது 18). இவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

இவரது அண்ணன் சூர்யா(19). இதே ஊரைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(19). இவர்கள் 3 பேரும் மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக சரக்கு வேனில் செல்லம்பட்டிக்கு சென்றனர். கல்லூரி விடுமுறை என்பதால் நித்தீசும் அவர்களுடன் சென்றுள்ளார்.

செல்லம்பட்டி சென்றுவிட்டால், அங்கிருந்து மதுரை செல்வது எளிது என்பதால் செல்லம்பட்டி வரை சரக்கு வேனில் ஆபத்தை உணராமல் இவர்கள் பயணம் செய்துள்ளனர். பி.மேட்டுப்பட்டி அருகே சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சரக்கு வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த நித்தீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் விபத்தில் காயம் அடைந்த சூர்யா, முத்துக்குமார் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்