வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-11 22:15 GMT
திருச்சி,

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த மாதம் 30-ந் தேதியுடன் 5 வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் தகுதி உடையவர்கள் ஆவர். மாற்றுத்திறனாளிகளில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து கடந்த மாதத்துடன் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முறையாக சேர்ந்து பயிலுபவராக இருக்கக்கூடாது. தமிழக அரசால் வழங்கப்படும் உதவிதொகை விவரம் வருமாறு:-

பொது பிரிவினருக்கு உதவித்தொகையாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600-ம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், எழுதப்படிக்க தெரிந்த மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1,000-ம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்க இயலாது. எனவே, தகுதி வாய்ந்த பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பள்ளி-கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டையினை அளித்து வேலைநாளில் விண்ணப்பப்படிவத்தை திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்