பேட்டை, சுரண்டையில் ; கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பேட்டை, சுரண்டையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-11 21:45 GMT
பேட்டை, 


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் 74 சதவீதம் வருகை பதிவுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராத கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்கள் பல்கலைக்கழகத்துக் குள் நுழைய முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் சில மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை கண்டித்து பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நேற்று 2-வது நாளாக அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக மூட்டா ஆசிரியர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். இதேபோல் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 

மேலும் செய்திகள்