பெண்ணிடம் வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டு சிறை - மயிலாடுதுறை கோர்ட்டு தீர்ப்பு

மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த வழக்கில் கணவர் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2018-10-12 21:30 GMT
மயிலாடுதுறை, 


நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் நிர்மல்குமார் (வயது 45). இவருக்கும், மகாராணி என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரு மாதத்திலேயே மகாராணியின் கணவர் நிர்மல்குமார், மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் கமலா, நாத்தனார் சர்மிளா ஆகிய 4 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு மகாராணியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மகாராணி கடந்த 2009-ம் ஆண்டு மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சமூக நலத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது நிர்மல்குமார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று தெரிகிறது. பின்னர் போலீசார் நிர்மல்குமாரிடம் பேசியும், அவருக்கு மனைவி மகாராணியுடன் வாழ விருப்பமில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார், மயிலாடுதுறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை வந்தது. வழக்கை விசாரணை செய்த ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு செல்லபாண்டியன், மகாராணியின் கணவர் நிர்மல்குமார், மாமனார் கிருஷ்ணமூர்த்தி (67), மாமியார் கமலா (62), நாத்தனார் சர்மிளா (40) ஆகிய 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்