வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜாகீர் நாயக்கின் சொத்துகள் முடக்கம் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளமதபோதகர் ஜாகீர் நாயக்கின் 4 சொத்துகளை முடக்க மும்பை சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

Update: 2018-10-12 22:30 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக். இவர் தனது அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டியதும், பேச்சு மற்றும் போதனைகள் மூலம் வெவ்வேறு மதத்தினர் இடையே பகைமை உணர்வை தூண்ட முயற்சி செய்ததும் தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சிறப்பு புலனாய்வு அமைப்பு இவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே இவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார்.

இ்ந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் மும்பை சிறப்பு கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதில், “ஜாகீர் நாயக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கிடைக்கும் நிதி தடைப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வெளிநாட்டில் இருந்தபடியே மும்பை மஜ்காவ் பகுதியில் உள்ள தனது சொத்துகளை விற்பனை செய்ய முயற்சிக்கிறார். எனவே மஜ்காவ் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான 4 சொத்துகளை முடக்க உத்தரவிடவேண்டும்” என்று கோரி இருந்தனர்.

வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு மஜ்காவ் பகுதியில் உள்ள மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு சொந்தமான நான்கு சொத்துகளையும் முடக்க உத்தரவு பிறப்பித்தது.

மேலும் செய்திகள்