உழவுப்பணியின் போது எந்திரத்தில் அடிபட்ட தொழிலாளி சாவு
தஞ்சையில் உழவுப்பணியின் போது எந்திரத்தில் அடிபட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை கரந்தை கொடிக்காலூர் புதுத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 43). விவசாய கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று கீரக்காரத்தெரு அருகே கரந்தட்டாங்குடி புறவழிச்சாலை பத்துக்கட்டு பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் எந்திரத்தை கொண்டு பால்ராஜ் உழவுப்பணி மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, இயங்கிக்கொண்டிருந்த உழவு எந்திரம் கவிழ்ந்து பால்ராஜ் மீது விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த அவர் உடனே மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் இறந்தார். இது குறித்து அவருடைய மனைவி வெண்மதி (38) போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தஞ்சை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா (பொறுப்பு), சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.