அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த பள்ளி ஆய்வக பெண் உதவியாளர் கைது

ஜெயங்கொண்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆய்வக பெண் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-12 23:00 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி ஜெயந்தி(வயது 47). இவர் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். ஜெயந்தி கடந்த சில மாதங்களாக செங்குந்தபுரம் கீழக்குடியிருப்பு, சோழங்குறிச்சி, ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் கூலி வேலை செய்பவர்களிடம், சத்துணவு மைய உதவியாளர், சமையலர் மற்றும் பல்வேறு துறைகளில் கணக்கர் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கி தருவதாக கூறி, அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு கூறியபடி இதுவரை ஜெயந்தி அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் கொடுத்த பணத்தை அவர்கள் திருப்பி கேட்டு ஜெயந்திக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்க வில்லை. இதனால் அவர்கள், ஜெயந்தி மீது அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகார் மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு பரிந்துரைத்தனர். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வளையாபதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் மொத்தம் ரூ.20 லட்சம் ஜெயந்தி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயந்தியை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்