இடமாற்றம் செய்யப்பட்டதால் ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை : நெல்லை அருகே பரிதாபம்
நெல்லை அருகே, இடமாற்றம் செய்யப்பட்டதால் ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சாத்ராக் சாமுவேல் (வயது 43). இவர் பாளையங்கோட்டையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரை பள்ளிக்கூட நிர்வாகம் பாளையங்கோட்டை பள்ளிக்கூடத்தில் இருந்து, அழகியபாண்டியபுரம் அருகில் உள்ள உக்கிரன்கோட்டை பள்ளிக்கூடத்துக்கு இடமாற்றம் செய்தது.
இதனால் சாத்ராக் சாமுவேல் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் சாத்ராக் சாமுவேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போனார். அவருடைய குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
நேற்று முன்தினம் நெல்லை அருகே டக்கரம்மாள்புரத்தை அடுத்த ஜோதிபுரம் காட்டுப்பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சாத்ராக் சாமுவேல் என்பதும், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து அவருடைய மனைவி அன்னாள் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரில், தனது கணவர் சாத்ராக் சாமுவேல் பணியிட மாறுதலால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.