நெல்லை மாவட்டத்துக்கு 11 புதிய பஸ்கள் அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்
நெல்லை மாவட்டத்துக்கு 11 புதிய பஸ்களை அமைச்சர் ராஜலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்துக்கு 11 புதிய பஸ்களை அமைச்சர் ராஜலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய பஸ்கள்
தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், நெல்லை மாவட்டத்துக்கு 41 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் 30 பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மீதம் உள்ள 11 பஸ்களின் தொடக்க விழா, நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு, புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மக்களின் வசதிக்காக...
தமிழக மக்களின் போக்குவரத்து வசதிக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 471 புதிய பஸ்களை வழங்கியுள்ளார். அவர் 211 பஸ்களை கடந்த 10-ந் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்துக்கு 41 பஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 30 பஸ்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். மீதம் உள்ள 11 புதிய பஸ்கள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.
நெல்லையில் இருந்து மதுரைக்கு 3 பஸ்களும், நெல்லையில் இருந்து திருச்செந்தூர், தென்காசி, பாபநாசம், தேனி, சிவகிரி ஆகிய ஊர்களுக்கு தலா ஒரு பஸ்களும் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 2 பஸ்களும், வள்ளியூரில் இருந்து ராமேசுவரத்துக்கு தலா ஒரு பஸ் என 11 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி.க்கள்
நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், கே.ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்யானந்த், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பணகுடி பேரூர் கழக அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் ஜி.டி.லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.