குழந்தை இறந்த 2-வது நாளில் விஷம் குடித்த தந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மீன்சுருட்டி அருகே குழந்தை இறந்த 2-வது நாளில் விஷம் குடித்த தந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-10-13 23:00 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்துள்ள காடுவெட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு ஜெயசுதா (வயது 2) மற்றும் ஜெயதீபா என்ற 6 மாத பெண் குழந்தை ஆகிய 2 குழந்தைகள். மணிகண்டன் தினமும் மது குடித்து விட்டு, மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதேபோல் கடந்த 9-ந்தேதி மணிகண்டன் கூலிவேலைக்கு சென்று விட்டு, பின்னர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அனுராதாவிடம் வழக்கம் போல் தகராறு செய்துள்ளார். இதில் 6 மாத குழந்தை ஜெயதீபா திடீரென உயிரிழந்தது. இதையடுத்து மணிகண்டன் மற்றும் சிலர் சேர்ந்து, யாருக்கும் தெரியாமல் குழந்தையின் உடலை அப்பகுதியில் புதைத்து விட்டனர். இதனால் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில் குழந்தை இறந்த 2-வது நாளில் மணிகண்டன் கடந்த 11-ந்தேதி விஷம் குடித்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே 6 மாத குழந்தை இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் லஷ்மிதரன், இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து, ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரய்யா முன்னிலையில் நேற்று குழந்தையின் உடலை தோண்டி எடுத்து, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்