மாணவர்கள் நினைவாற்றலை மேம்படுத்தி கொள்ள வேண்டும் கலெக்டர் அன்பழகன் அறிவுரை

மாணவர்கள் நினைவாற்றலை மேம்படுத்திகொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2018-10-13 22:45 GMT
தரகம்பட்டி,

கடவூர் வட்டம், காணியாளம்பட்டி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தூய்மையான வளர்ச்சியை அடைய தொடர்ந்து எடுக்கும் முயற்சிதான் தன்னம்பிக்கை. எதுவும் நினைத்தவுடன் கிடைத்து விடாது. நீங்கள் தேடித்தேடி போக வேண்டும். அதற்காக தன்னை தகுதிப்படுத்தி கொள்ள வேண்டும். நன்றாக படிப்பவர், எழுதுபவர் மற்றும் நினைவாற்றல் கொள்பவர்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.

தொடர் முயற்சிக்கு கண்டிப்பாக நல்ல முடிவு உண்டு. ஒரே விஷயத்தை 4 வழிகளில் செய்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். 24 மணி நேரத்தை நீங்கள் எவ்வாறு செலவு செய்கிறீர்கள் என்பதை தீர்மானிப்பதன் மூலமே உங்கள் வாழ்க்கை அமையும். படிப்பது, ஒப்புவிப்பதற்காக அல்ல, புரிந்துகொள்வதற்காக. ஒருவர் எழுதிய கருத்து மற்றும் கணக்குகளை நாம் படிப்பதற்கோ அல்லது புரிந்துகொள்வதற்கோ சிரமமாக எடுத்துக்கொண்டால் அதை எழுதியவரின் உழைப்பை எண்ணி படிக்க வேண்டும்.

உங்களை நீங்களே செதுக்கிக்கொள்வதற்காக ஏற்படும் வலியை பொறுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் நினைவாற்றலை மேம்படுத்திகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் லியாகத், கல்லூரி முதல்வர் தேன்மொழி, வட்டாட்சியர் கற்பகம், வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்