பஸ் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர் கைது மேலும் 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

பஸ் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-10-13 22:10 GMT
பெரம்பூர், 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து மாநகர பஸ் திருவான்மியூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சில் மாநில கல்லூரி மாணவர்கள் 10 பேர் உள்பட 30 பயணிகள் இருந்தனர்.

வண்ணாரப்பேட்டை மகாராணி பஸ் நிறுத்தத்தில் பஸ் வந்தபோது அங்கு தியாகராய கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது மாநில கல்லூரி மாணவர்கள், தியாகராய கல்லூரி மாணவர்களை பார்த்து கோஷம் போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தியாகராய கல்லூரி மாணவர்கள் கற்களை எடுத்து பஸ் மீது வீசினர்.

இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. 3 பயணிகள் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இது குறித்து பஸ் டிரைவர் ராஜேந்திரன், தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தியாகராய கல்லூரி மாணவர் மகேசை (வயது 19) கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 6 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்