அண்ணா நகர் பகுதியில் நகை-செல்போன் பறித்த 3 பேர் கைது

அண்ணா நகர் பகுதியில் நகை, செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-13 22:19 GMT
பூந்தமல்லி,

சென்னை அண்ணா நகர் பகுதியில் அடிக்கடி நகை மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதையடுத்து அண்ணா நகர் உதவி கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வந்தனர்.

சம்பவம் நடந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அதில் பதிவான உருவங்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் பதிவு எண்களை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் அண்ணா நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக ஒரே மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். அந்த மோட்டார்சைக்கிளுக்கு உரிய ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.

இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், சென்னை வடபழனியை சேர்ந்த சந்தோஷ்குமார்(வயது 20), பார்த்திபன்(24), மாங்காட்டை சேர்ந்த எட்வின்(19) என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து சென்னை அண்ணா நகர், சூளைமேடு, ராஜமங்கலம், அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் மற்றும் நகைகளை பறித்து வந்ததும் தெரிந்தது.

அதைதொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகள், 10 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்