கடன் வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம், 10 பவுன் நகை மோசடி செய்த தம்பதி - போலீசில் புகார்

கடன் வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம், 10 பவுன் நகை மோசடி செய்த தம்பதி மீது போலீசில் புகார் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

Update: 2018-10-16 22:45 GMT
திருவண்ணாமலை,

போளூர் ராகவன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமரப்பன் (வயது 42). இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த மணிக்குமார், அவரது மனைவி சுதாலட்சுமி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். முத்துக்குமரப்பனுக்கு பணம் தேவை உள்ளதை அறிந்த மணிக்குமாரும், சுதாலட்சுமியும் சேர்ந்து நாங்கள் உனக்கு தனியார் வங்கிகளில் இருந்து ரூ.25 லட்சம் வரை லோன் வாங்கி தருகிறோம் அதற்கு முன்பணமாக ரூ.2½ லட்சம் தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதனை நம்பிய முத்துக்குமரப்பன் கடந்த மார்ச் மாதம் ரூ.2½ லட்சம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த தம்பதியினர் அடிக்கடி முத்துகுமரப்பனிடம் பணம் கேட்டு உள்ளனர். இப்படி முத்துகுமரப்பனிடம் இருந்து அவர்கள் சுமார் ரூ.7 லட்சம் மற்றும் 10 பவுன் நகை வாங்கி உள்ளனர்.

பணத்தையும், நகையும் திருப்பி தரும்படி முத்துக்குமரப்பன் அவர்களிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் சமாதானம் செய்து காலம் கடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் முத்துக்குமரப்பன், அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்களது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து முத்துக்குமரப்பன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்