மோட்டார்சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி பூ மாலை கட்டும் தொழிலாளி பலி

மோட்டார்சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி பூ மாலை கட்டும் தொழிலாளி பலியானார்.

Update: 2018-10-17 23:03 GMT
தூசி,

தூசி குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன். இவருடைய மகன் மகேந்திரன் (வயது 28). இவர் பூக் கடையில் பூமாலை கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரும் தன்னுடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் மணிகண்டனும் நந்தகொல்லை கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை மகேந்திரன் ஓட்டினார்.

வந்தவாசி- காஞ்சீபுரம் சாலையில் மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது செய்யாறில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மகேந்திரன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி ரேவதி (23) தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்