மலேசியாவில் இருந்து சென்னைக்கு எமர்ஜென்சி விளக்கில் மறைத்து ரூ.36 லட்சம் தங்கம் கடத்தல்

மலேசியாவில் இருந்து சென்னைக்கு எமர்ஜென்சி விளக்குகளில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கஇலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-10-19 22:45 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பெரும் அளவில் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அதில் சென்னையை சேர்ந்த இஸ்மாயில் (வயது 35), காசிம்(30) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

பின்னர் 2 பேரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் இருந்த சூட்கேஸ்களில் எமர்ஜென்சி விளக்குகள் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது, அதன் உள்ளே தங்க தகடுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் எடைகொண்ட தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரும் யாருக்காக அந்த தங்கத்தை மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்