நெல்லை அருகே தனியார் நிறுவன ஊழியர் மர்ம சாவு

நெல்லை அருகே தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Update: 2018-10-22 22:00 GMT
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள அலவந்தான்குளத்தை சேர்ந்தவர் அமல்ராஜன் (வயது 40). இவர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அமல்ராஜன் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றார். நேற்று காலை வேலை செய்யும் நிறுவனத்தில் அமல்ராஜன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலில் சிராய்ப்பு காயம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அமல்ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் அமல்ராஜன் உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அமல்ராஜன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்