தேர்வில் தேர்ச்சி பெறாத விரக்தியில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர் விஷம் தின்று தற்கொலை

ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் படித்த கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த மாணவர், முதலாமாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத விரக்தியில் விஷத்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-10-24 23:00 GMT
ஒரத்தநாடு,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நம்பியூர் டி.எம்.எஸ். காலனி பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் பாபு. வெற்றிலை வியாபாரியான இவரது மகன் அசாருதீன்(வயது 19). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவராக இக்கல்லூரியில் சேர்ந்து அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த முதலாமாண்டு தேர்வு முடிவில் அசாருதீன் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அசாருதீன் சம்பவத்தன்று இரவு, விஷத்தை(எலி பேஸ்ட்) தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனால் விடுதி வளாகத்தில் மயங்கி விழுந்த அவரை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மாணவர் அசாருதீனின் தாயார் சவுதாபேகம் அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் அசாருதீன், தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவில் வேறு ஏதும் மர்மங்கள் உள்ளதா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்