மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து நகை, பணம் திருட்டு

மதுராந்தகம் அருகே மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2018-10-24 20:48 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கீழ்சிலாவட்டத்தை சேர்ந்தவர் கமலகண்ணன். இவரது மனைவி முனியம்மாள் (வயது 42). இவர் நேற்று காலை தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணிக்காக வீட்டை பூட்டி சாவியை அருகில் உள்ள பூந்தொட்டியில் மறைத்து வைத்து விட்டு சென்றார்.

திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகை, 2 ஜோடி கொலுசு, 3 ஏ.டி.எம் கார்டு, ரூ.40 ஆயிரம் உள்ளிட்டவை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முனியம்மாள் மதுராந்தகம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோனி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். முனியம்மாள் வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர், பூந்தொட்டியில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து திருடியிருப்பது தெரியவந்தது.

மேலும் காஞ்சீபுரத்தில் இருந்து மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்களை சேகரித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்